தேவர்கள் சுரசையை அனுப்புதலும் அனுமான் வெற்றிபெறுதலும்:
இப்படி அனுமான் வேகமாக செல்லும் போது சுரஸையெனும் நாக கன்னிகை ஒருத்தி தேவர்களால் சொல்லிஅனுப்பப்பட்டு அனுமானது வீரத்தை மேலும் அறிய வேண்டி அதி பயங்கர ராக்ஷச சரீரத்தை எடுத்துக்கொண்டு விகாரமாய் கோர ரூபத்தை தரித்துக்கொண்டு பயத்தை உண்டுபண்ணும்படி வந்து, அனுமானை வழிமறித்து, "ஓ வானரனே! தேவர்கள் உன்னை எனக்கு இரையாக அளித்திருக்கிறார்கள்; ஆகையால் நான் உன்னை புசிக்கும்படி என் வாயில் வந்து புகுவாயாக" என்றாள். இதைக்கேட்ட அனுமான், தான் ராமகார்யமாக மிக அவசரமாக சென்று சீதையின் நிலையறிந்து ராமனுக்கறிவித்த பிறகு, நானே உன் வாயில் வந்து விழுகிறேன் என்று சத்யம் செய்து கூறியும், சுரஸா தேவி அனுமானை நோக்கி "வானரஸ்ரேஷ்டனே, எனது வாயில் புகாமல் நீ போக இயலாது" என்று தன் அகலமான வாயை திறந்தபடி அனுமான் முன் நின்றாள்.
அனுமான் மிகுந்த கோபம் கொண்டு பத்து யோஜனை நீளமும் பத்து யோஜனை அகலமும் தன் சரீரத்தை பெருக்கினான்; உடனே சுரசையானவள் தன் வாயை இருப்பது யோஜனை தூரம் திறந்துவிட்டாள். உடனே அனுமான் முப்பது யோஜனை வளர, சுரஸை நாற்பது யோஜனையாக வளர்ந்தாள். பின்பு அனுமான் ஐம்பது யோஜனையாகப் பெருக்க, சுரஸை அறுபதானாள். அனுமான் எழுபதாக, சுரஸை எண்பதானாள். அனுமான் தொண்ணூறாக, சுரஸை நூறு யோஜனையாக நீண்டனள். உடனே, அனுமான் தன் உடலை ஒரு கட்டைவிரல் அளவிற்கு சுருக்கி திடீரென்று அவள் வேகமாய் புகுந்து சடக்கென வெளிப்பட்டு, வெற்றிக்களிப்பில், "அம்மையே! நான் இப்போது உன் வாயில் புகுந்து வெளிவந்துவிட்டேன், இனி நான் எம் சீதா பிராட்டியை தேடிச் செல்கின்றேன்" என்றுரைக்க, சுரஸை தன் நிஜ ரூபதோடு, "ஓ வானரோத்தமா, உனது அறிவாற்றலை மெச்சினேன்; நீ செல்லும் கார்யம் சித்தியடையட்டும்!" என்று வாழ்த்தினாள். பிறகு அனுமான் சமுத்திரத்தை ஒரு பொருட்டாகக்கருதாமல் ஆகாயத்தில் கருடனென பாயத்தலைப்பட்டான்.
Comments
Post a Comment